தற்போது விவசாயத்தில் எதிர்பார்த்த வருவாய் இல்லை என விவசாயிகள் பலரும் கூறிவருகிறார்கள்.இந்நிலையில் நாம் நினைத்தால் விவசாயத்திலும் சாதிக்கலாம்.அதிக வருமானத்தையும் சம்பாதிக்கலாம்.இதற்கு தேவை பொறுமை,விடாமுயற்சி, தொடர் செயல்பாடு இவை இருந்தால் எதிலும் தோல்வி என்பது இல்லை. இதனை கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பகுதி விவசாயி ராமசந்திரன் நிருபித்து கூறுகிறார்.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு குறுக்குரோடு பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன்.இவர் விவசாயத்தில் வழக்கமான பயிர்செய்தும் எதிர்பார்த்த வருவாய் இல்லை.இவர் யதேச்சையாக கரூர் பக்கம் சொந்த விஷயமாக சென்றார்.அப்போது பலர் கோரைகள் பயிர்செய்துள்ளதை பார்த்தார். இதுகுறித்து அங்குள்ள விவசாயிகளிடம் கேட்டார்.அவர்கள் கோரைப்பற்றிய விவரம் மற்றும் சாகுபடி முறைகளை விளக்கமாக எடுத்துக்கூறினர்.அதனை கெட்டியாக பிடித்துக்கொண்ட இவர் சொந்த ஊர் திரும்பினார்.வரும்போதே கோரையில் நல்ல எதிர்காலம் இருப்பதை அறிந்தார்.
உடனடியாக தனது குடும்பத்தில் உள்ளவர்களிடம் தெரிவித்தார். அவர்கள் முட்டுக்கட்டை போட்டனர். ராமச்சந்திரன் தனது குடும்பத்தினருடன் மனவருத்தம் அடைந்து தனக்கு சொந்தமான நான்கு ஏக்கர் வயலில் கோரையை பயிரிட்டார்.இவர் கோரையை பயிர்செய்வதை பார்த்ததும் பல விவசாயிகள் உனக்கு எதுக்கு தேவையில்லாத வேலை? பிழைக்கத்தெரியாதவன் என கிண்டலும், கேலியும் செய்தனர்.இவற்றிற்கு மனம் சோர்ந்துபோகவில்லை.கடலூர் மாவட்டத்தில் முதல் விவசாயியாக இப்போது வரை இவர் மட்டும்தான் கோரை கைகொடுத்தன.ஆம் பயிர்செய்த ஓராண்டிலிருந்து கோரை அறுவடைக்கு தயாரானது.இவர் கோரையை அறுவடை செய்து அதனை விற்பனை செய்வதற்கு சிரமப்படவில்லை.தமிழகத்தின் பலபகுதிகளிலிருந்தும் வியாபாரிகள் நேரடியாக வயலுக்கே வந்து வாங்கிச்சென்றார்கள்.கஷ்டப்பட்டதின் பலன் கோரையால் பணமாக மாறியது.இவரது கோரைகள் தமிழகத்தின் பலபகுதிகளிலும் தரமான கோரைப்பாய்களாக மாற்றமடைந்து பலராலும் விரும்பி வாங்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன.திருவண்ணாமலை, விழுப்புரம்,காஞ்சிப்புரம்,செங்கல்பட்டு,திண்டிவனம் உள்ளிட்ட தமிழகத்தின் பலபகுதிகளுக்கும் கோரைகள் செல்கின்றன.இது குறித்து ராமச்சந்திரன் தெரிவிக்கும்போது பலரும் கோரையைப்பற்றி தெரியாத காரணத்தினாலும், இதில் எவ்விதமான லாபம் உள்ளது என புரியாமலும் எடுத்த எடுப்பிலேயே இதனை ஒதுக்கிவிடுகிறார்கள்.நான் கடந்த எட்டாண்டுகளுக்கு முன்பு பயிர்செய்ய ஆரம்பித்தேன்.
ஆண்டுக்கு இரண்டுமுறை அறுவடை.ஒருமுறை பயிர்செய்தால் பத்தாண்டுகளுக்குமேல் அதிலிருந்து அறுவடை செய்யலாம்.அள்ள அள்ளகுறையாத வருமானம்.எல்லாவகையான காலநிலையிலும் கோரையை வளர்க்கலாம்.என்னிடம் பத்து பேர்க்குமேல் பணியாளர்கள் வேலை செய்கிறார்கள்.அவர்களின் மனம் விரும்பும்படி சம்பளம்கொடுக்கிறேன்.எனக்கு மற்ற வழக்கமான விவசாய சாகுபடியிலிருந்து கிடைக்கும் வருமானத்தைவிட கோரையில் அதிக அளவில் வருமானம் வருகிறது.சந்தோஷமாக உள்ளேன்.இதில் நஷ்டத்திற்கு வேலையே இல்லை.கோரைக்கான தேவை எப்போதும் இருந்து வருவதால் இதனை யார் பயிர் செய்தாலும் நல்லவருவாய் கிடைக்கும்.கொஞ்சம் பொறுமை, விடாமுயற்சி, கடின உழைப்பு இருந்தால் போதும்.மற்ற விவசாயிகளும் இதனை பயிர்செய்ய முன்வந்தால் விவசாயத்தினால் யாரும் நஷ்டம் அடைய வாய்ப்பே இல்லை.நமது விவசாயிகள் ஒரே மனப்பான்மையில் இருப்பதால் அவர்களுக்கு மாற்றுப்பயிர் செய்வதில் ஆர்வம் வருவதில்லை.என்னிடம் யார்வந்தாலும் அவர்களுக்கு கோரை சாகுபடி பத்தின அனைத்து விவரங்களையும் தருகிறேன். அவர்களையும் என்னைப்போல் உயர்த்துவதற்கு நான் தயாராகவே இருக்கிறேன்.என்று அன்போடு மற்றவர்களுக்கு அழைப்பும்விடுக்கிறார்.
ஒருவர் விவசாயத்தில் பலநூறு ஏக்கர் பயிர்செய்வது முக்கியமில்லை.அந்த பலநூறு ஏக்கரிலும் கோரையப்போன்று வருமானம் வரவேண்டும் என்பதே இவரின் கோரிக்கையாக இருக்கிறது.அள்ள அள்ள குறையாத வருமானம் வருவதால் கோரையை பச்சைத்தங்கம் என்றே குறிப்பிடலாம் எனவும் தெரிவிக்கிறார். நமது வாழ்க்கை முறையில் கோரைப்பாய்கள் அதிகளவில் பயன்பாட்டில் இருக்கிறது.பெரியோர்கள் முதல் மருத்துவர்கள் வரை அனைவரும் மருத்துவ குணமிக்க கோரைப்பாயை பரிந்துரைப்பது இதற்கு சாட்சி.